India

தொழில்முனைவோர் தற்கொலைகள் அதிகரிப்பு... NCRB அறிக்கையால் அம்பலப்பட்டு நிற்கும் பா.ஜ.க அரசு!

2020ஆம் ஆண்டில் தொழில்முனைவோர்கள் அதிகளவில் தற்கொலை செய்துகொண்டிருப்பது NCRB ஆண்டறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

NCRB எனப்படும் தேசிய குற்ற ஆவண பாதுகாப்பகம் நாடு முழுவதும் நடைபெறும் குற்ற நிகழ்வுகளின் புள்ளி விவரங்களை தொகுத்து ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.

அதன்படி 2020ஆம் ஆண்டுக்கான NCRB அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதில் கொரோனா பேரிடர் காலத்தில் நாடு முழுவதும் தற்கொலை சம்பவங்கள் கடுமையாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா பேரிடர் மக்களின் வாழ்க்கை, தொழில் என யாவற்றையும் புரட்டிப் போட்டுள்ள நிலையில், நோய்த்தொற்றை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் வணிகர்கள், தொழில்முனைவோர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த ஆண்டு தொழில்முனைவோர்கள் அதிகளவில் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. என்.சி.ஆர்.பி அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டு 11,716 வணிகர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். இதே காலகட்டத்தில் 10,677 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

கர்நாடகாவில் மட்டும் 1,772 தொழில்முனைவோர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 1,610 பேர் தற்கொலை செய்து செய்துகொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 1,447 தொழில்முனைவோர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது 2019-ஆம் ஆண்டை விட 36% அதிகம்.

பா.ஜ.க அரசால் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஆகியவை சிறுதொழில்முனைவோர்களை பெரிதும் சிரமத்துக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில், கடந்தாண்டு ஏற்பட்ட கொரோனா பேரிடர் தொழில்முனைவோரிடத்தில் பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி தற்கொலைக்குத் தூண்டியுள்ளது இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது.

தொழில்முனைவோர்களுக்கான கொரோனா நலத்திட்டங்களை நாங்கள் முறையாகச் செய்து வருகிறோம் என ஒன்றிய பா.ஜ.க அரசு கூறி வரும் நிலையில், இந்த அறிக்கை பா.ஜ.க அரசின் பொய்களை அம்பலப்படுத்தியுள்ளது.

Also Read: “டிசம்பரிலும் மழை வெளுக்கப்போகுது..” : முன்கூட்டியே அறிவித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!