India

கர்நாடகாவில் தக்காளி விலையால் நடந்த விபரீதம்; மின்வேலியை போட்டவரும், அதனை தாண்டியவருக்கும் நேர்ந்த சோகம்!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா சரக்கமதேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வத்ராவ் (வயது 55). இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் கிராமத்தில் உள்ளது.

அந்த தோட்டத்தில் அஸ்வத்ராவ் தக்காளி பயிரிட்டு வளர்த்து வந்தார். இந்த நிலையில் தக்காளி விலை உயர்ந்து உள்ளதால் இரவு நேரத்தில் தக்காளியை யாரும் பறித்து சென்று விடக்கூடாது என்பதற்காக தனது தோட்டத்தை சுற்றி அஸ்வத்ராவ் மின்வேலி அமைத்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த நிலத்தின் அருகே சென்ற சரக்கமதேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த வசந்த குமார்(31) என்பவர் தக்காளி தோட்டத்தில் தக்காளியை திருட சென்று உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின்வேலியில் சிக்கி கொண்டார். இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். அவரது உடலை போலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் அஸ்வத்ராவ் தனது நிலத்தின் அருகே நின்றார். அப்போது அங்கு வந்த வசந்தகுமாரின் குடும்பத்தினர், வசந்தகுமார் சாவுக்கு நீ தான் காரணம் என்று கூறி அஸ்வத்ராவ் கம்பி, கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிக்பள்ளாப்பூர் காவல் கண்காணிப்பாளர் மிதுன்குமார், கவுரிபிதனூர் போலிசார் அங்கு சென்று அஸ்வத்ராவின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில் தக்காளியை பாதுகாக்க போடப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி வசந்தகுமார் இறந்ததால், அஸ்வத்ராவை வசந்தகுமாரின் குடும்பத்தினர் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கவுரிபிதனூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

Also Read: வரதட்சணை பணத்தை இப்படியும் பயன்படுத்தலாம்.. மணமகளின் முடிவிற்குக் குவியும் பாராட்டு: காரணம் என்ன?