India

"குழந்தைகளை திருட்டு தொழிலுக்கு பயன்படுத்திய கும்பல்" : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

புதுச்சேரியில் அரசுப் பேருந்து நடத்துநராக பணியாற்றி வருபவர் வேல்விழி. இவர் அக்டோபர் 9ஆம் தேதி நெல்லித்தோப்பு சுப்பையா சாலையில் பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குழந்தையுடன் இரண்டு பெண்கள் அவர் அருகே வந்தனர். பின்னர் இவர்கள் வேல்விழியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.

பின்னர் பேருந்து ஏறி வேல்விழி வீட்டிற்குச் சென்று உடைகளை மாற்றும்போது மணி பர்ஸ் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து வேல்விழி பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்த இடத்திலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் இவரிடம் இரண்டு பெண்கள் பேசும்போது அவருக்குத் தெரியாமல் மணி பர்சை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்தப் பெண்கள் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அந்தப் பெண்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என புதுச்சேரி போலிஸாருக்கு தெரியவந்தது. பின்னர் போலிஸார் ஆந்திரா சென்று அந்த இரண்டு பெண்களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது குழந்தைகளை தங்களின் திருட்டு தொழிலுக்குப் பயன்படுத்துவதாகக் கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் சி.சி.டி.வி காட்சியில் இருந்த குழந்தையை அவரது பெற்றோர்களிடம் பேசி இந்தப் பெண்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர். பின்னர் தங்களின் திருட்டு தொழிலுக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். இதில் கிடைக்கும் பணத்தில் பாதியைக் குழந்தையின் பெற்றோருக்குக் கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் இரண்டு பெண்களையும், குழந்தையை வாடகைக்கு விற்ற பெற்றோரான ஜீவா, துர்கா ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் இந்த நான்கு பேரிடமும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: பேண்ட் பாக்கெட்டில் இருந்தபோது வெடித்த ‘ONEPLUS’ PHONE.. இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் - நடந்தது என்ன?