India

புதுச்சேரியில் திருடிய துணிகளை மகாராஷ்டிராவில் விற்ற பலே கும்பல்... போலிஸில் சிக்கவைத்த CCTV!

புதுச்சேரி செயிண்ட் தெரசா தெருவில் துணிக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த மாதம் 15ஆம் தேதி மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான துணிகளை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் துணிக்கடையில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடையின் அருகே ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட வாகனம் ஒன்று நின்றுள்ளது. இந்த வாகனம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.

அதில், அந்த வாகனம் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது ரியாஸ் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி போலிஸார் ராஜஸ்தான் சென்றனர். அங்கு முகமது ரியாஸிடம் விசாரணை செய்ததில் துணிக்கடையில் நண்பர்களுடன் சேர்ந்து திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். பிறகு முகமது ரியாஸ் மற்றும் அவரது நண்பர் உசேன் ஆகியோரை போலிஸார் புதுச்சேரி அழைத்து வந்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா முடிந்து செல்லும்போது துணிக்கடையில் புகுந்து துணிகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

பிறகு மகாராஷ்டிரா அருகே திருடிய துணிகளை ரூபாய் 200, 300க்கு விற்பனை செய்துள்ளனர். இப்படி ரூ.26 ஆயிரம் வரை துணிகளை விற்பனை செய்து ராஜஸ்தான் சென்றுள்ளனர். இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: வாட்ஸ்ஆப்பில் முகம் தெரியாத பெண்ணிடமிருந்து வந்த ‘மெசேஜ்’.. 5 லட்சம் ரூபாய் பறிபோன சம்பவம்: நடந்தது என்ன?