India

“புகார் கொடுக்க சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்பெக்டர்”: பா.ஜ.க ஆளும் உ.பி-யில் தொடரும் அவலம்!

உத்தர பிரதேச மாநிலம், இட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்குக் கடந்த ஆண்டு சக்ராநகர் பகுதியைச் சேர்ந்த நபருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண் கணவர் மீது புகார் கொடுப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி காவல்நிலையம் சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த காவல்நிலைய ஆய்வாளர் புகாரைப் பெற்றுக்கொண்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அந்த பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அதை வீடியோ எடுத்து பலமுறை மிரட்டி மீண்டும் மீண்டும் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த அந்த பெண்ணின் கணவருக்கு ஃபோனில் அழைத்த காவல் ஆய்வாளர், உன் மனைவியை நான் சொல்லும் இடத்திற்கு அழைத்து வரவில்லை என்றால், மனைவியின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டியிருக்கிறார்.

இதையடுத்து அந்தப் பெண் கணவரின் உதவியுடன் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் காவல் ஆய்வாளர் மீது புகார் ஒன்றை அளித்தார். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கொடுக்க வந்த பெண்ணை காவல் ஆய்வாளரே வன்கொடுமை செய்த சம்பவம் காவல்துறை வட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மூடநம்பிக்கையின் உச்சம்.. “புனிதநீர் தெளித்தால் போதும்”: உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கதி!