India

"23 பேர்தான் சாட்சியா?": விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கில் உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் ஏற்றியதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என நாடு முழுவதும் கண்ட குரல் எழுந்ததை அடுத்து அவர் போலிஸாரிடம் சரணடைந்தார். பிறகு அவரை போலிஸார் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, விவசாயிகள் மீது கார் ஏற்றியது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வுக்கு வந்தது.

அப்போது உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, "விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட வழக்கில் 16 எதிரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 67 சாட்சிகளில் 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 23 பேர் விவசாயிகள் மீது கார் ஏறியதை நேரில் பார்த்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா, "நூற்றுக் கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தபோது 23 பேர் மட்டும்தான் கார் ஏறியதைப் பார்த்தார்களா? கூடுதல் சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யாதது ஏன்?" என உத்தர பிரதேச அரசுக்குச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும் பத்திரிகையாளர், பா.ஜ.கவினர் உயிரிழந்தது தொடர்பாகவும் தனி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Also Read: "சேர்த்துவச்ச காசை கொடுக்குறேன்.. உடனே இதை பண்ணுங்க" : கர்நாடக முதல்வருக்கு 7 வயது சிறுமி வைத்த கோரிக்கை!