India

ஸ்மார்ட் போனுக்காக மனைவியை விற்ற கணவன்: ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!

ஒடிசா மாநிலம் போலங்கரி மாவட்டத்திற்குட்பட்ட சுலேகேலா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து இந்த தம்பதி செங்கல் சூளையில் வேலை பார்ப்பதற்காக ராஜஸ்தான் சென்றுள்ளனர். அங்கு வேலை பார்த்து வந்தபோது ராஜேஸ் தனது மனைவியை ரூ.1,80 லட்சத்திற்கு விற்றுள்ளார். பின்னர் இந்த பணத்தில் ஒரு ஸ்மார்ட் போனை வாங்கியுள்ளார்.

பிறகு மீதி பணத்தை எடுத்துக் கொண்டு சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது ராஜேஷ் தனியாக வந்ததைப் பார்த்த உறவினர்கள் அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது மனைவி தன்னை விட்டு ஓடிவிட்டதாக அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதை நம்பாத பெண்ணின் உறவினர்கள் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் ராஜேஷை அழைத்து விசாரணை செய்தனர். அப்போது மனைவியைப் பணத்திற்கு விற்று விட்டதாக கூறினார்.

இதைக்கேட்டு உறவினர்கள் மற்றும் போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பிறகு ஒடிசா போலிஸார் ராஜஸ்தான் சென்று அந்த பெண்ணை மீட்டு வந்தனர். பின்னர் மனைவியை விற்ற குற்றத்திற்காக ராஜேஷை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: ஆபாச படம் பார்க்க மறுத்த 6 வயது சிறுமியை அடித்துக் கொன்ற‌ சிறுவர்கள்: அசாமில் நடந்த பயங்கரம்!