India

“இதுக்கு மேல முடியாது” - டீசல் விலை உயர்வை பொறுக்க முடியாமல் அரசுப் பேருந்தை கடத்திய மர்ம கும்பல்!

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துவிட்டது. டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து சில பகுதிகளில் விலை ரூ. 100-ஐ எட்டிவிட்டது.

டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை வாகனங்களில் இருந்து திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் டீசல் திருடுவதற்காக அரசுப் பேருந்தையே மர்ம கும்பல் கடத்திய சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தும்குரு மாவட்டம் குப்பி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் ஓட்டுநர் ஹனுமந்தராயா நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.

மறுநாள் காலை பேருந்தை எடுப்பதற்காக பேருந்து நிலையத்துக்கு காலை 6 மணிக்கு வந்துள்ளார் ஓட்டுநர் ஹனுமந்தராயா. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தைக் காணவில்லை.

இதையடுத்து அவர் பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலிஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த போலிஸார் காணாமல் போன அரசுப் பேருந்தை தேடிவந்தனர்.

அந்தப் பேருந்தில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தப்பட்டிருந்ததால் அது இருக்கும் இடத்தைக் கண்டறிந்தனர். அப்பேருந்து குப்பி பேருந்து நிலையத்தில் இருந்து 30 கி.மீ தொலைஇல் உள்ள ஜனனினஹள்ளி பகுதியில் இருப்பது தெரியவந்தது.

அங்கு சென்ற போலிஸார் பேருந்தைக் கண்டுபிடித்தனர். ஆனால், பேருந்தில் இருந்த டீசல் முழுமையாக திருடப்பட்டிருந்தது. டீசலுக்காக பேருந்து கடத்தப்பட்டிருக்கலாம் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகத்தில் கார், பைக் போன்ற வாகனங்களில் பெட்ரோல், டீசல் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அரசுப் பேருந்தை கடத்தி டீசல் திருடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மக்களின் தலையில் இடியாக இறங்கும் பெட்ரோல் - டீசல் விலை” : மோடி அரசை சாடிய ‘முரசொலி’ தலையங்கம்!