India

சுற்றிவளைத்த போலிஸ்... “இனி தப்பிக்க முடியாது” என துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட குற்றவாளி!

ராஜஸ்தான் மாநிலம், ஜகுன்குஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோப் சந்த். இவர் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் இவர் மீது காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், ரோப் சந்த்தை போலிஸார் பலமுறை பிடிக்க முயற்சி செய்தும் இவர்கள் கையில் சிக்காமலே இருந்து வந்துள்ளார். இதனால் குற்றவாளியைப் பிடித்துக் கொடுத்தால் ரூ. 5 ஆயிரம் பரிசுத்தொகை அளிக்கப்படும் என போலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து ரோப் சந்த் கோட்புட்லி பகுதியில் பதுங்கியிருப்பதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலிஸார் தலைமறைவாக இருந்த ரோப் சந்த்தை சுற்றி வளைத்தனர். அப்போது அவருடன் இருந்த கூட்டாளிகள் போலிஸாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.

ஆனால், ரோப் சந்த் மட்டும் தப்பிச் செல்ல முடியாமல் போலிஸாரிடம் மாட்டிக் கொண்டார். பிறகு போலிஸிடமிருந்து தப்ப முடியாது என நினைத்த ரோப் சந்த் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.

Also Read: சிவப்பு விளக்கு எரிந்தால் வண்டியை ஆப் செய்யவும்... வாகன ஓட்டிகளுக்கு டெல்லி அரசு புதிய உத்தரவு!