India

சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக கூறி 4 நாட்களாக பெண்ணை சீரழித்த கும்பல்... கேரளாவில் கொடூரம்!

கேரள மாநிலம், தொவரிமலைப் பகுதியைச் சேர்ந்தவர் சம்ஷாத். இவர் அந்தப் பகுதியில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் நோயாளிகளுக்குச் சிகிச்சைக்கு பண உதவிகள் போன்றவற்றைச் செய்து வருகிறார்.

இந்நிலையில், இதேபகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும், அவரது மகனும் உடல் நலக்குறைவால் மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் அவதிபட்டு வருவதை சம்ஷாத் அறிந்துள்ளார்.பிறகு அவர்கள் வீட்டிற்குச் சென்று மருத்துவச் சிகிச்சைக்கான பணத்தை ஏற்பாடு செய்து கொடுப்பதாக அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், இவர்களைப் பற்றி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பண உதவியும் கேட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் பண உதவி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறி பெண்ணையும், அவரது மகனையும் எர்ணாகுளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சம்ஷாத்தின் நண்பர்களான பசல் மகபூப், செய்பு ரகுமான் ஆகியோர் உடனிருந்துள்ளனர். எர்ணாகுளத்தில் தாயையும், மகனையும் லாட்ஜில் வேறு வேறு அறையில் தங்க வைத்துள்ளனர். அப்போது பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயங்க மருந்து கொடுத்து நான்கு நாட்களாக மூன்று பேரும் சேர்ந்த பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர், இதை வெளியே சொல்லக்கூடாது என கூறி இருவரையும் வீட்டில் விட்டுள்ளனர். இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் போலிஸில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து சம்ஷாத், பசல் மகபூப், செய்பு ரகுமான் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

Also Read: “பேஸ்புக்கில் பழக்கம்.. 16 வயது சிறுமி 4 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை” : கர்நாடகாவில் நடந்த கொடூரம்!