India

உயரும் கேஸ் விலை; விநியோக கொள்கையை மாற்றிய மோடி அரசு? அம்பலப்படுத்திய இந்தியன் ஆயில் இயக்குநர்!

2025 முதல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப்படும். இதனால் என்ஜின் திறனில் எந்த பாதிப்பும் வராது என ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளது என இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் எஸ்.எஸ்.வி.ராம்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியன் ஆயில் நிறுவன விரிவாக்கம் குறித்தும், மாற்று எரிசக்தி குறித்தும் இன்று இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் எஸ்.எஸ்.வி.ராம்குமார் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

பெட்ரோல் டீசல் உடன் எத்தனால் கலப்பதால் என்ஜின் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெட்ரோல் டீசல் என்ஜினில் எரியும் திறனோடு எத்தனால் சேர்ந்தால் அதிக அளவு ஆக்டான்ஸ் கிடைக்கும். எனவே பெட்ரோல் டீசலில் எத்தனால் கலப்பதால் எவ்வித இழப்பும் பயனாளருக்கு ஏற்படாது. மேலும் தற்போது 10% அளவிற்கு பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படும் நிலையில், 2025 முதல் 20% எத்தனால் கலக்கப்படும்.

இந்தியன் ஆயில் நிறுவனம் CNG வாயு தயாரிக்கும், விநியோகிக்கும் நிலையங்களை நாடு முழுவதும் நிறுவ உள்ளது. இதன் மூலம் 5000 தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

CNG வாயுவுடன் ஹைட்ரஜன் வாயுவை கலப்பதால் அதி திறன் கொண்ட CNG வாயு கிடைப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் வந்துள்ளது. எனவே அவை உற்பத்தி செய்வது விநியோகம் செய்வது குறித்து பாதுகாப்பு நடவடிக்கைக்காக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். அதன் அனுமதி கிடைத்த உடன் CNG வாயுவுடன் ஹைட்ரஜன் வாயு கலந்து விநியோகம் செய்யப்படும்.

இந்தியாவில் 90% மக்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்துகின்றனர். ஆனால் 50% குறைவான உற்பத்திதான் இந்தியாவில் நடக்கிறது. எனவே பெரும்பாலான எரிவாயுவிற்கு இந்தியா இறக்குமதியை நம்பிதான் உள்ளது. இதற்கு முன்பு சலுகை விலையில் LPG விநியோகம் செய்யப்பட்டது. தற்போது அரசின் கொள்கையின் படி, சர்வதேச சந்தை விலையை பொறுத்து விற்கப்படுகிறது. இதனால் விலை மாறுதல் ஏற்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ”பேரன் போல நான் இருக்கேன்” - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சால் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் நெகிழ்ச்சி!