India

சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் ஆடையை கழற்றி அத்துமீறிய பிரபல மருத்துவர்.. கோவாவில் அதிர்ச்சி சம்பவம்!

சிகிச்சைக்காக கிளினிக்கிற்கு வந்த பெண்ணின் பேண்ட்டை கழற்றி, தவறாக நடக்க முயன்ற மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மாநிலம் மபுசா பகுதியில் பிரபலமான எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். பெண் ஒருவர் தனது இடுப்பில் வலி ஏற்பட்டதன் காரணமாக அந்த மருத்துவரின் கிளினிக்குக்கு பரிசோதனை செய்வதற்காக தனியாகச் சென்றுள்ளார்.

அப்போது அந்த கிளினிக்கில் பெண் உதவியாளர் இல்லாத நிலையில், பரிசோதனைக்காக வந்த பெண்ணை உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறார் மருத்துவர். பின்னர் படுக்கை ஒன்றில் சோதனை செய்யவேண்டும் எனக் கூறி படுக்கச் சொல்லியிருக்கிறார்.

பின்னர், அந்த பெண் அணிந்திருந்த பேண்ட்டை அந்த மருத்துவரே கழற்றியிருக்கிறார். மருத்துவர் தனக்கு பரிசோதனை செய்வதற்காகத்தான் இப்படிச் செய்கிறார் என அந்தப் பெண் நினைத்திருந்த நேரத்தில், மருத்துவர் தனது கையை பெண்ணின் பிறப்புறுப்பை நோக்கி நகர்த்தியுள்ளார்.

இதனால் அதிர்ந்த அப்பெண் மருத்துவரின் கையை சட்டென தட்டிவிட்டிருக்கிறார். பின்னர் மீண்டும் மருத்துவர் படுக்கச் சொன்னபோது சுதாரித்துக் கொண்ட அப்பெண் அங்கிருந்து வெளியேறி தனது காருக்கு சென்றார்.

பின்னர் தனக்கு நடந்தவற்றை கண்ணீருடன் தனது கணவருக்கு போன் செய்து கூறியுள்ளார் அப்பெண். அவரது கணவர் விரைந்து வந்து மருத்துவரை கன்னத்தில் அறைந்துள்ளார். பின்னர், காவல்நிலையம் சென்று சம்பந்தப்பட்ட மருத்துவரின் மீது புகார் அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும்போது உதவிக்கு பெண் ஊழியர் இல்லாதது குறித்தும் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

பிரபல மருத்துவர் ஒருவர் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அ.தி.மு.க ஆட்சியில் இருமடங்காக அதிகரித்த சிறார் குற்றங்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்டை வெளியிட்ட NCRB!