India

சாப்பிட அடம்பிடித்த குழந்தை... சாட்டையால் வெளுத்த கொடூர தந்தை : தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

தெலங்கானா மாநிலம், மேடக் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். டிராக்டர் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி உயிரிழந்த நான்கு மாதத்திலேயே வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுடன் முதல் மனைவியின் குழந்தையும் வளர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் சாப்பிட மறுத்த தனது மகளை நாகராஜ் மது போதையில் கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், குழந்தையை நாகராஜ் சாட்டை போன்ற பொருளால் கொடூரமாகத் தாக்குகிறார். குழந்தை வலி தாங்க முடியாமல் சத்தம்போட்டு அழுகிறது. குழந்தையின் அழுகைக்கு மனமிரங்காமல் தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருக்கிறார்.

அப்போது அருகே அவவது இரண்டாவது மனைவி கல்நெஞ்சத்துடன் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்காமல் அப்படியே அமர்ந்துள்ளார். இந்தச் சம்பவத்தை சக குடியிருப்புவாசிகள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். மேலும் இதுகுறித்து போலிஸில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சாப்பிட மறுத்ததால் குழந்தையைத் தாக்கியதாகக் கூறியுள்ளார். இதையடுத்து மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறு போலிஸார் அவருக்கு அறிவுரை கூறி எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்.

இருந்தபோதும் குழந்தையை தாக்கிய தந்தை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த கணவன்: பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அரங்கேறும் அவலம்!