India

BJP ஆட்சியில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்.. ஒரே ஆண்டில் நடந்த 50,000 மோசடிகள்: NCRB அதிர்ச்சி தகவல்கள்!

இந்தியாவில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிகமாகக் குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2020ம் ஆண்டில் மட்டும் 50 ஆயிரம் சைபர் குற்றங்கள் நடந்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது.

இது குறித்து என்.சி.ஆர்.பி வெளியிட்ட அறிக்கையில், ”இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் 50 ஆயிரத்து 35 சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. இது 2019ம் ஆண்டை விட 11.8% அதிகமாகும். ஒரு லட்சம் பேருக்கு என்ற விகிதத்தில் சைபர் குற்றங்கள் எடுத்துக்கொண்டால் 2020ம் ஆண்டில் 3.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

4047 வங்கி மோசடி,1093 ஓ.டி.பி (ODP) மோசடிகள்,1195 கிரெடிட், டெபிட் கார்டு மோசடிகள், 2,160 ஏ.டி.எம் தொடர்பான சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. அதேபோல் சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் தொடர்பாக 578 சம்பவங்கள் நடந்துள்ளன.

இணையதளம் மூலம் பெண்கள், குழந்தைகள் மனரீதியாகத் துன்புறுத்தல் தொடர்பாக 972 வழக்குகள், போலியான கணக்கு வைத்து மோசடி செய்ததாக 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலியல் துன்புறுத்தல், பயன்படுத்துதல் தொடர்பாக 3,293 வழக்குகள் (6%), மிரட்டல் தொடர்பாக 2,400 வழக்குகள் (4.9%) பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சைபர் குற்றங்களில் அதிகபட்ச சைபர் குற்றங்கள் பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 11,097 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது. அதேபோல் கர்நாடகாவில் 10,741 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 5,496 வழக்குகளும், தெலங்கானாவில் 5,024 வழக்குகளும், அசாமில் 3,530 வழக்குகளும் பதிவாகியுள்ளது என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் 8,34,947 கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.92.18 கோடியாகும். நாட்டில் கள்ளநோட்டு புழக்கம் கொரோனா காலத்தில் 130.5 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை தெரிவிக்கிறது.

Also Read: டெல்லிவரை செல்வாக்கு இருக்கு.. மருத்துவ சீட்டு வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த பா.ஜ.க தம்பதி!