India

டெலிவரி செய்ய தாமதமானதால் ஓட்டல் உரிமையாளர் சுட்டுக் கொலை : உ.பியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேச மாநிலம், நொய்டா நகரத்தில் 'ஜாம் ஜாம்' என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று தனியார் நிறுவனத்தின் உணவு டெலிவரி பாய் ஒருவர் உணவு ஆர்டர் வாங்குவதற்காக வந்துள்ளார்.

அப்போது, அவருக்கான ஆர்டர் செய்யப்பட்ட உணவு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெலிவரி பாய் உணவக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தீவிரமடைந்துள்ளது.

இதனால், உணவக உரிமையாளர் இந்த பிரச்சனையில் தலையிட்டுள்ளார். அப்போது திடீரென டெலிபரி பாய் தான் வைத்திருந்த துப்பாக்கியால் உணவக உரிமையாளரைச் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் உணவக ஊழியர்கள் உரிமையாளரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து அறிந்த போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து உரிமையாளரை சுட்டு கொலை செய்த டெலிவரி பாயையும், அப்போது அவருடன் இருந்த இரண்டு பேரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உணவகம் தாமதமாக கொடுத்ததால்தான் கொலை நடந்ததா? அல்லது முன்பகை ஏதாவது இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் டெலிவரி பாய்க்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்தும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உணவக உரிமையாளர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ’ஒரு ப்ளேட் பானிபூரி.. ஃபேமிலி காலி’ - உயிரை விட்ட மனைவி.. கைதான கணவன் : புனேவில் பகீர் சம்பவம்!