India

வித்தியாசமான முறையில் மணப்பெண் தேடிய இளைஞர்... வெளிநாடுகளில் இருந்தெல்லாம் குவிந்த விசாரிப்புகள்!

கேரளாவில் திருமணத்திற்கு பெண் தேவை என இளைஞர் ஒருவர் டீக்கடையில் போர்டு வைத்ததால் அவருக்கு வெளிநாடுகளில் இருந்தெல்லாம் அழைப்புகள் வந்துள்ளன.

கேரள மாநிலம் திருச்சூரில், இளைஞர் ஒருவர் டீக்கடையில் திருமணத்திற்கு பெண் தேவை என விளம்பர அறிவிப்பு செய்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

திருச்சூரை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்ற 33 வயதான இளைஞர் சில வருடங்களாக திருமணத்திற்காக பெண் தேடியும் கிடைக்காத நிலையில் தனது டீக்கடையில் தனக்கு திருமணம் செய்துகொள்ள பெண் தேவை என விளம்பரம் செய்தார்.

அந்த விளம்பர அட்டையில், ஜாதி, மதம் பார்க்கவில்லை என குறிப்பிட்டு, அவரது கைபேசி எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். அதை அவரது நண்பர்கள் சிலர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

அதன் காரணமாக தற்போது ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர் போன்ற நகரங்களிலிருந்து எல்லாம் உன்னி கிருஷ்ணனுக்கு அழைப்புகள் வருகிறதாம்.

இதுபற்றி பேசியுள்ள உன்னிகிருஷ்ணன், “எனக்கு தலையில் கட்டி இருந்தது. தற்போது அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து விட்டோம். அதன் பின் வாழ்க்கையை துவங்கலாம் என ஒரு லாட்டரி கடை ஆரம்பித்தேன். பின் அதையே ஒரு டீக்கடையாக மாற்றி விட்டேன்.

தற்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். எனவே எனக்கு திருமணம் செய்ய பெண் தேவை என விளம்பரப்படுத்தினேன். இதை சமூக வலைதளங்களில் எனது நண்பர்கள் பதிவிட்டதன் காரணமாக எனக்கு வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பல்வேறு அழைப்புகள் வருகின்றன.” எனக் கூறியுள்ளார்.

Also Read: "நாட்டில் உள்ள பெண்களுக்கு எங்களால்தான் பாதுகாப்பு” : சிறிதும் கூச்சமின்றிப் பேசிய பா.ஜ.க தலைவர்!