India

"கொரோனா 3வது அலையை வரவேற்கும் சங்கிகள்" : பா.ஜ.க யாத்திரையை சாடிய சிவசேனா தலைவர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஏப்ரல், மே மாதங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 4 லட்சம் என்று பதிவாகி வந்தது. இதையடுத்து மாநிலங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

குறைந்துவந்த தொற்று எண்ணிக்கை தற்போது சற்று அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

இதனால், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் கூட்டமான இடங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் மக்களுக்கு அரசுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்கிறோம் எனக் கூறி பா.ஜ.கவினர் ஆசிர்வாத் யாத்திரையைத் தொடங்கியுள்ளனர். கொரோனா தொற்று மூன்றாவது அலை உருவாவதற்கான வாய்ப்பு இருக்கும் நிலையில் நாடு முழுவதும் பா.ஜ.கவினர் தொடங்கியுள்ள இந்த யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.கவினர் நடத்தும் இந்த யாத்திரையால் கொரோனா மூன்றாவது அலை உருவாகும் அபாயம் உள்ளது என சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பா.ஜ.கவினர் நடத்தும் யாத்திரையால் ஒரு பலனும் இல்லை. தங்களின் வலிமையை காட்டுவதாக நினைத்து கொரோனா மூன்றாவது அலையை வரவேற்கிறார்கள். இவர்களால் மாநில அரசுகளுக்குத்தான் பெரும் தலைவலி வந்து சேரும்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பேசுவோர் ஆப்கானுக்கு செல்லலாம்” : பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!