India

“சிறுவர்களை அடிமையாக்கும் Free Fire கேம்” : தடைகோரி பிரதமர் மோடிக்கு டெல்லி நீதிபதி கடிதம்!

இந்தியாவில் பப்ஜி ஆன்லைன் விளையாட்டினால் சிறுவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பப்ஜி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒன்றிய அரசு தடை செய்தது.

இதனால், சிறுவர்கள் பப்ஜி விளையாட்டிற்கு மாற்றாக ஃப்ரீ ஃபயர் விளையாட்டை தேர்வு செய்து விளையாடி வருகிறார்கள். மேலும் பப்ஜியும் வேறு வடிவத்தில் எளிதாக கிடைத்தைத் தொடர்ந்து மீண்டும் அதைப் பதிவிறக்கம் செய்து விளையாடி வருகிறார்கள். பெயர் அளவில் மட்டுமே பப்ஜி விளையாட்டு தடையாக இருக்கிறது. ஆனால் இதற்கான தரவுகள் இணையத்தில் எளிதாக கிடைக்கிறது.

இதனால் பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற ஆன்லைன் விளையாட்டால் சிறுவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகியுள்ளனர். தற்போது கொரோனா காலம் என்பதால் 24 மணி நேரமும் ஆன்லைன் விளையாட்டிலேயே இருந்து வருகிறார்கள். எனவே இந்த விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி நீதிபதி நரேஷ் குமார் லாக கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஃப்ரீ ஃபயர் மற்றும் பப்ஜி இந்தியா (பேட்டில் கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா) ஆகிய இரண்டு ஆன்லைன் விளையாட்டுக்கள் இணையதளத்தில் எளிதாகக் கிடைக்கின்றன. மேலும் பல ஆன்லைன் விளையாட்டு செயலிகளும் உள்ளன.

இவற்றை விளையாடும் குழந்தை கள் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடிய குழந்தைகளைப் போல மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளை அடிமைப்படுத்தும் இந்த ஆன்லைன் விளையாட்டைத் தடை செய்ய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ”இனி கொரோனா போரை வெல்லும் வீரர்கள் மக்கள்தான்” அதற்கான ஆயுதங்கள் இவைதான்? பட்டியலிட்ட தினத்தந்தி நாளேடு!