India

கணவரைக் கொல்ல, அவரது நண்பர்களையே கூலிப்படையாக பயன்படுத்திய மனைவி... திடுக்கிடச் செய்த ‘மர்டர் பிளான்’!

குடித்துவிட்டு கொடுமைப்படுத்திய கணவரை கொலை செய்ய அவரது நண்பர்களையே கூலிப்படையாகப் பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் சுர்கி எனும் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டது. மேலும், அந்த கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள குளத்தில், அவரது இருசக்கர வாகனம் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் உயிரிழந்த நபரின் பெயர் தனேஷ் சாகு என்பதும், அவர் சுர்கி கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது.

பின்னர் தனிப்படை அமைத்து போலிஸார் கொலையாளிகளைத் தேடி வந்தனர். தனேஷ் சாகுவை கடைசியாக அவருடைய நண்பர்கள் மூவருடன் சேர்ந்து பார்த்ததாக காவல்துறையினருக்கு முக்கிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கொல்லப்பட்டவரின் நண்பவர்கள் மூவரிடமும் விசாரணை நடத்தினர்.

தனேஷ் சாகுவின் மனைவியிடமும் போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், தனேஷ் சாகு, அடிக்கடி குடித்துவிட்டு தன்னை துன்புறுத்துவார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினரின் தொடர் விசாரணையில் அவரது மனைவி, தனது கணவர் குடித்துவிட்டு தன்னை கொடுமைப்படுத்தியதால் அவரை தீர்த்துக்கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தனது கணவர் தனேஷ் சாகுவை கொல்வதற்காக அவரது நண்பர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி, ஆளுக்கு தலா 7 ஆயிரம் ரூபாயை முன்பணமாக தந்ததாகவும். ஆகஸ்ட் 1ஆம் தேதி அவர்கள் மூவரும் தனேஷ் சாகுவை குடிக்க வைத்து அவர் மயக்கமான பின்னர் கொலை செய்து பிணத்தை மறைத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கணவரின் நண்பர்களையே கூலிப்படையாக மாற்றி கணவரைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இன்ஸ்டாகிராம் காதல்.. காதலியை நிர்வாண வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலன்.. போக்சோவில் கைது!