India

பெகாசஸ் சர்ச்சை... இது தான் வாய்ப்பு: வேலை நிறுத்தத் தடை மசோதாவைத் தாக்கல் செய்த ஒன்றிய அரசு!

ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிப்புக்காக நாடு முழுவதிலும் ஒன்றிய அரசின் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் கடந்த 4 வருடங்களுக்கு முன் ஆயுதங்கள் உற்பத்தியில், 'குறிப்பிட்ட தயாரிப்புகள் மட்டுமே' எனும் வகையான ஒரு கொள்கை உருவாக்கப்பட்டது.

இதனால், பெரும்பாலான தொழிற் சாலைகளில் நடைபெற்று வந்த பல முக்கிய ஆயுதங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன்மூலம், சுமார் 20,000 கோடி ரூபாயாக இருந்த இந்த தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதியாகக் குறைந்து வருகிறது.

இந்நிலையில், ராணுவத் தளவாட வழங்கலில் தன்னாட்சி, பொறுப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில், இந்த தொழிற்சாலைகளை நூறு சதவீதம் அரசுக்கு சொந்தமான கார்ப்பரேட் நிறுவனமாகவோ அல்லது நிறுவனங்கள் சட்டம் 2013-இன் கீழ் அதனை ஒரு நிறுவனமாக்கு ஒன்றிய அரசு முடிவு செய்தது.

இந்த முடிவுக்கு எதிராக, பாதுகாப்புத்துறை ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் வேலை நிறுத்தத்திற்கு நோட்டீஸ் கொடுத்திருந்தன. ஜூலை 26 முதல் வேலை நிறுத்தம் துவங்குவதாகவும் இருந்தது.

இந்நிலையில்,மக்களவையில் 'அத்தியாவசிய பாதுகாப்பு சேவை மசோதா 2021' ஒன்றிய இணையமைச்சர் அஜய் பட் அறிமுகப் படுத்தியுள்ளார். ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இச்சட்டம் அத்தியாவசிய பாதுகாப்பு சேவைத் துறையில் வேலை நிறுத்தத்தைத் தடை செய்யும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

மேலும் வேலை நிறுத்தம், போராட்டம் போன்றவற்றில் இத்துறையினர் ஈடுபட்டால் பணி நீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். சட்டவிரோத வேலைநிறுத்தங்கள், அதைத் தூண்டுதல் மற்றும் அதற்கு நிதியுதவி வழங்குதல் போன்றவற்றிற்கு அபராதம் விதிக்கவும் இம்மசோதா அதிகாரமளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “மீனவர்களின் வாழ்க்கையைப் பறிக்கும் மீன்வள மசோதா”: கடலை கார்ப்பரேட்டுக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசு!