India

“ஆபரேஷன் தியேட்டர்களில் பீர் பாட்டில்கள்” : பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அவலம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலையின்போது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. மேலும் பல மருத்துவமனைகளில் சுகாதார கட்டமைப்பே இல்லாததால் அம்மாநில மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை கொரோனா விதிகளுக்குட்பட்டு அடக்கம் செய்யாமல் கங்கை நதியில் மிதக்க விட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் 45 தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பல மருத்துவமனைகளில் ஆபரேஷன் தியேட்டர்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் பீர் பாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், லக்னோ மாவட்ட ஆட்சியர் அபிஷேக் பாண்டே உத்தரவின் பேரில் திங்களன்று துணை ஆட்சியர்களின் பல குழுக்கள் ஒரே நேரத்தில் 45 தனியார் மருத்துவமனைகளில் சோதனை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு உரிமம் இல்லாமலும் அல்லது அரசு உரிமம் புதுப்பிக்கப்படாமலும் பெரும்பாலான மருத்துவமனைகள் இயங்கி வருவது சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர்கள் இல்லாமல் தற்காலிக மருத்துவர்களே பணியாற்றி வந்துள்ளனர்.

அதேபோல், நியூ ஏசியன் ஹாஸ்பிட்டல் அண்ட் ட்ராமா சென்டர்’ என்ற மருத்துவமனையில் பி.எஸ்சி. மட்டுமே பயின்ற பிரேம்குமார் வர்மா என்பவரே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சோதனை நடந்த பல மருத்துவமனைகளின் ஆபரேஷன் தியேட்டர்களில், குளிர்சாதனப் பெட்டிகளில் மருந்துகளுக்குப் பதிலாக பீர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மருத்துவக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பல மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை மற்றும் அதிநவீன சிகிச்சைப் பிரிவில் எக்ஸ்ரே உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இல்லை எனத் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து லக்னோ மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பல மருத்துவமனைகளை மூட உத்தரவிட்டுள்ளார். மேலும்,சில மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Also Read: "ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படவே இல்ல.. யாருமே இறக்கல” - வாய்கூசாமல் பொய் சொன்ன பா.ஜ.க இணை அமைச்சர்!