India
ஸ்பைவேர் மூலம் பத்திரிகையாளர்களின் செல்போன்களை வேவு பார்த்த மோடி அரசு? : ஆய்வில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவன பெகாஸஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பலரின் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக ‘பகீர்’ தகவல் வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக ஃபார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து தி வயர், வாஷிங்டன் போஸ்ட், கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டன.
பிரபல ஊடக நிறுவனங்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் என்.ஸ்.ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்பதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, மெக்சிகோ, ஹங்கேரி பஹ்ரைன் உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்தவை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன் எண்களும் இந்த ஒட்டுக்கேட்பு பட்டியலில் இருந்துள்ளன. இதில் 2 அமைச்சர்கள் 3 எதிர்க்கட்சி தலைவர்கள் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், நீதிபதி ஆகியோரின் எண்களும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன. பல சமூக செயற்பாட்டாளர்களின் எண்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் மொபைல் போன் தரவுகளும் வேவுபார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொருவரின் செல்போனும் சில பிரத்யேக காரணங்களுக்காகக் குறிவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘தி வயர்’ ஊடகத்தின் ஆசிரியரான ரோகினி சிங்கின் செல்போன், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும், அவரது மகன் ஜெய்ஷா மற்றும் பிரதமர் மோடியுடன் இணக்கமாக இருந்து வந்த தொழிலதிபர் நிகில் ஆகியோர் இடையேயான வணிக விவகாரங்கள் குறித்து ‘தி வயர்’ தளத்தில் எழுதிய பிறகு, கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 2018-ம் ஆண்டு முதலே பத்திரிகையாளர்களின் செல்போன் தரவுகள் மற்றும் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பெகாசஸ் ஸ்பைவேரை வடிவமைத்த என்.எஸ்.ஓ நிறுவனம் தாங்கள் ஸ்பைவேரை, சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கில் அரசாங்க அமைப்புகளுக்கு மட்டுமே விற்பனை செய்ததாகத் தெரிவித்துள்ளது.
இந்த செல்போன் எண்கள் வேவு பார்க்கப்பட்டவையா என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வு தொடர்வதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!