India

“கொரோனா பயத்தால் 41% குழந்தைகள் பாதிப்பு” : AIIMS வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இந்தியா கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனாவால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று தாக்குதல் ஒருபுறம் என்றால், மறுபுறம் மன அழுத்தத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள்ளன.

குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் கொரோனாவால் அதிகம் பதற்றமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கொரோனா மீதான பதற்றத்தால் 41% குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நடத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவர் ஷெலாஃபி குலாட்டி தலைமையில் பெருந்தொற்றுக் காலத்தில் ஊரடங்கின் போதும், தனிமைப்படுத்தப்பட்டபோதும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 22,296 நபர்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், “22.05% குழந்தைகளுக்கு கொரோனா குறித்தான பயம் ஏற்பட்டிருக்கிறது. பதற்றத்தால் 41% குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். மேலும் 35.02% மற்றும் 21.03% குழந்தைகளுக்கு சலிப்பு மற்றும் உறக்கத்தில் சிக்கலை எதிர்கொண்டனர். குழந்தை பராமரிப்பாளர்களால் 52.03% பேர் பயத்தாலும், 27.04% பேர் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 34.05% குழந்தைகளிடம் பதற்றம், கவலை, எரிச்சல், கவனமின்மை ஆகிய பிரச்சனைகளைக் காண முடிகிறது. மேலும் இரண்டு வயதுக் குழந்தைகளுக்கு தங்களைச் சுற்றி நடக்கும் மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்கிறார்கள். இதனால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “ஆதரவற்றோர் காப்பகம் எனும் பெயரில் குழந்தைகள் கடத்தல்” - தலைமறைவான முக்கிய குற்றவாளிகள் கைது!