India

கணவருக்கு தானே இறுதிச் சடங்குகளைச் செய்த மந்திரா பேடி... மூடநம்பிக்கைகளை உடைத்ததாக ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பிரபல நடிகையும், கிரிக்கெட் தொகுப்பாளினியுமான மந்திரா பேடியின் கணவர் ராஜ் கௌஷல் (49) நேற்று அதிகாலை மாரடைப்பால் மும்பையில் மரணமடைந்தார்.

நடிகராக வாழ்க்கையைத் தொடங்கிய ராஜ் கௌஷல் பின்னர் தயாரிப்பாளராகவும் மாறினார். கடந்த 1999-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ராஜ் - மந்திரா தம்பதியருக்கு வீர் மற்றும் தாரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் தாராவை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் மந்த்ரா பேடி.

மும்பையிலுள்ள தனது வீட்டில் நேற்று காலை ராஜ் கௌஷலுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னதாகவே அவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

ராஜ் கௌஷல் இறுதிச் சடங்கின்போது மந்திரா பேடி கதறி அழுதார். அதேநேரம் தன் கணவரின் உடலை தானும் சுமந்து சென்று, கணவருக்கான இறுதிச் சடங்குகளை மந்திரா பேடியே செய்தார்.

இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. சடங்கின்போது உடைக்கப்படும் மண்பானை வழக்கமாக ஆண்களால்எடுத்துச் செல்லப்படும். இந்த மரபுகளை உடைத்து மண்பானைகளை எடுத்துச் செல்வது உள்ளிட்ட அனைத்து இறுதிச் சடங்குகளையும் மந்திரா பேடியே முன்னின்று தனது காதல் கணவருக்காக செய்தார்.

மூடநம்பிக்கைகளை உடைத்தெறியும் விதமாக, கணவர் மீது கொண்ட காதல் காரணமாக நடிகை மந்திரா பேடியே இறுதிச் சடங்குகள் செய்தது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Also Read: முதல் ஊசியில்லா தடுப்பு மருந்து... 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிக்கு அனுமதி கோரிய ஜைடஸ் கெடிலா!