India

“குதிரைதான் வண்டியை இழுக்கவேண்டும்; வண்டியால் குதிரையை இழுக்கமுடியாது” : ஒன்றிய அரசை சாடிய ப.சிதம்பரம்!

“குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும், ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்குங்கள்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், 'ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்' என வலியுறுத்தினர்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் மற்றும் தலைவர்கள் முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என விரும்புகின்றனர்; பின்னர் தேர்தல்களை நடத்தலாம் என்கிறார்கள். ஒன்றிய அரசின் பதில் முதலில் தேர்தல், பின்னர் மாநில அந்தஸ்து எனக் கூறுகிறது.

குதிரைதான் வண்டியை இழுக்கவேண்டும். ஜம்மு - காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அதன் பின் தேர்தல் நடத்த வேண்டும். மாநில அரசு தான் சரியான முறையில் தேர்தலை நடத்த முடியும். ஆனால் ஒன்றிய அரசோ முதலில் தேர்தல் நடத்த முயலுகிறது. வண்டியால் குதிரையை இழுக்க முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: மின் மாஃபியா... மின் வாரியத்தைச் சீர்குலைத்த கும்பல் - அதிரடி நடவடிக்கை பாயுமா? - ஆவலில் மக்கள்!