India

“மூக்கில் சொட்டு மருந்தாக செலுத்தும் வகையிலான தடுப்பு மருந்து விரைவில் வரும்” - பிரதமர் மோடி உரை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் முழு ஊரடங்கு நடவடிக்கை தீவிரமானதையடுத்து கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது சீராக குறைந்து வருகிறது.

தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால், மாநிலங்களுக்கு போதுமான அளவு தடுப்பூசி வழங்காமல் இருந்து வருகிறது ஒன்றிய அரசு.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றி வருகிறார்.

பிரதமர் மோடி பேசுகையில், “இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. நவீன உலகம் கொரோனாவை போன்று ஒரு பெருந்தொற்றை கண்டதே இல்லை.

கொரோனா இரண்டாவது அலையில் நமது உறவுகள் பலரை நாம் இழந்துள்ளோம்; கொரோனாவுக்கு எதிராக இந்தியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரை மேற்கொண்டுள்ளது.

கொரோனாவைத் தொடர்ந்து புதிய சுகாதார கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான மருந்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல்-மே மாதங்களில் மருத்துவ ஆக்சிஜன் தேவை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்தது. ஆக்சிஜன் வசதியை போர்க்கால அடிப்படையில் அதிகரித்து சாதித்துள்ளோம்.

கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம், தனி மனித இடைவெளி முக்கியம். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேகம் இருமடங்கு அதிகரித்துள்ளது.

தடுப்பூசி மட்டுமே கொரோனாவை தடுக்கும் பேராயுதம். இந்தியாவின் கோவாக்சின் ஒரு உயிர் காக்கும் மருந்தாக அமைந்துள்ளது.

உள்நாட்டில் தடுப்பூசி தயாரிக்காவிட்டால் நாம் என்ன செய்திருக்க முடியும்? முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்?

மேலும் 3 தடுப்பூசிகள் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன. தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மூக்கில் சொட்டு மருந்தாக செலுத்தும் வகையிலான தடுப்பு மருந்து விரைவில் வரும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “முத்தான முதல் 30 நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனைகள்..!” : சிறப்பு செய்தி தொகுப்பு !