India

“பிரதமரை விமர்சித்தது தேசதுரோகம் கிடையாது; வன்முறையை தூண்டுவதுதான் தேசதுரோகம்” - உச்ச நீதிமன்றம் அதிரடி!

மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா, தனது வினோத் துவா ஷோ என்ற யூ டியூப் சேனல் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பேசினார். அதில், கொரோனா பரவலின் போது பிரதமர் நடத்திய சில அறிவிப்புகளை விமர்சித்திருந்தார். மேலும், தீவிரவாத தாக்குதல்களையும், உயிர் பலிகளையும், ராணுவ நடவடிக்கைகளையும் பிரதமர் தேர்தலில் வாக்கு சேகரிக்கப் பயன்படுத்தி வருகிறார் என்றும் கூறியிருந்தார்.

பிரதமர் குறித்து இப்படிப் பேசியது தேச துரோக குற்றம் என்று இமாச்சால பிரதேச பாஜக பிரமுகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வினோத் துவா மீது தேசதுரோக வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில்தான் பிரதமரையோ, அரசையோ விமர்சித்துப் பேசியது தேச துரோக குற்றமாகாது. இந்தப் பிரிவிலிருந்து பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். நாடு முழுதும் இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் முன்னதாக உச்ச நீதிமன்றம் 60 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீர்ப்பினை காவல்துறையினர் கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்று இன்று வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி கால் யூ.யூ.லலித், வினீத்சரன் ஆகியோர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வன்முறையைத் தூண்டுவதோ, அதற்குத் துணைபோவதோ, பொது அமைதிக்கு இடையூறு விளைவிப்பதோ மட்டுமே தேசதுரோக குற்றப்பிரிவின் கீழ் வரும் என்று கூறி பத்திரிகையாளர் மீதான வழக்கையும் உச்ச நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.

அண்மைக்காலமாக தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மற்றொரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பத்திரிகையாளர்கள் மீதான தேசதுரோக வழக்குகளுக்கு ஒரு எல்லை நிர்ணயிக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read: தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ₹35,000 கோடி என்ன ஆனது? - மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!