India

ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை 62% அதிகரிப்பு : விலை உயர்வு மூலம் மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

இந்தியாவில், அனைத்து விதமான பொருட்களின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 22 அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி பல மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் தரவுகள் படியே, உணவுப் பொருட்களில் - பருப்பு வகைகள், பழங்கள், முட்டை மற்றும் இறைச்சிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

மார்ச் மாதத்தைக் காட்டிலும், ஏப்ரல் மாதத்தில் பருப்பு வகைகளின் பணவீக்க விகிதம் 10.74 சதவிகிதம், பழங்கள் மீதான பண வீக்கம் 27.43 சதவிகிதம், பாலின் மீதான பணவீக்க விகிதம் 2.04 சதவிகிதம், முட்டை, இறைச்சி, மீன் மீதான பணவீக்க விகிதம் 10.88 சதவிகிதம் என்று உயர்ந்தது.

இதற்கிடையேதான் சமையல் எண்ணெய் விலையும் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வனஸ்பதி, சோயா, பாமாயில், சூரியகாந்தி, கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்ட அனைத்து வகையான எண்ணெய் விலைகளும் உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டு விலையைக் காட்டிலும், இந்தாண்டில் எண்ணெய் விலை 62.35 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வானது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச விலை அதிகரிப்பாகும். கொரோனா பாதிப்பு, ஊரடங்கு ஆகியவற்றால் கோடிக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் நிலையில், அத்தியாவசியப் பொருளான எண்ணெயின் விலை உயர்வு மக்களைக் கடுமையாக பாதித்து வருகிறது.

மேலும், ஓராண்டில் 56% வரை விலை உயந்திருப்பதாக மத்திய நுகர்வோர் துறை கணக்குகள் கூறுகின்றன. சந்தையில் அதைவிட பல மடங்கு விலை உயர்ந்துள்ளதாகக் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக, பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி வரும் சூரியகாந்தி எண்ணெயின் விலை 110 ரூபாயிலிருந்து 172 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு வருடத்தில் 62.ரூ உயர்ந்துள்ளது.

அதே போன்று பாம் ஆயில் 87 ரூபாயிலிருந்து 134 ரூபாயாக உயர்ந்துள்ளது. சோயாபீன்ஸ் எண்ணெய் 100 ரூபாயிலிருந்து 154 ஆக உயர்ந்துள்ளது. இப்படி கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் என்று அனைத்து சமையல் எண்ணெய்களும் பல மடங்கு விலை உயந்துள்ளது.

இந்நிலையில், விலை உயர்வுக்கான காரணம் குறித்து, மத்திய உணவுத் துறைச் செயலாளர் சுதான்சு பாண்டே பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “இந்தியாவின் தேவைக்கேற்ப எண்ணெய் வித்துகள் உற்பத்தி இல்லை.

நமது நாட்டின் எண்ணெய் தேவையில், 60 சதவிகிதத்தை இறக்குமதி மூலமாகவே ஈடுகட்டுகிறோம். இறக்குமதியை நாம் அதிகம் சார்ந்து உள்ளோம். எனவே, சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை உயரும் போது இந்தியாவிலும் அதன் விலை உயரும் சூழல் ஏற்படுகிறது” என்று வழக்கமான கதையைக் கூறியுள்ளார்.

Also Read: “நடுரோட்டில் காரை வழிமறித்து மருத்துவ தம்பதி சுட்டுக்கொலை” : மனதைப் பதறவைக்கும் CCTV காட்சி !