India

கொரோனா 2வது அலையில் மட்டும் 420 மருத்துவர்கள் பலி.. ‘IMA’ வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது முதல் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா நோயாளிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதால், மருத்துவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

தற்போது கொரோனா இரண்டாவது அலையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலைக்கு 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.எம்.ஏ வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸ் 2-வது அலையில் சிக்கி இதுவரை நாடு முழுவதும் 420 மருத்துவர்கள் உயிரிழந்தனர். இதில் ஐ.எம்.ஏ முன்னாள் தலைவரும், பிரபல மருத்துவருமான கே.கே.அகர்வால், டெல்லி ஜி.டி.பி மருத்துவமனையில் பணியாற்றிய 25 வயது இளம் மருத்துவர் அனாஸ் முஜாகித் என பலர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

இந்தியாவில் அதிகப்படியோக டெல்லியில் இதுவரை 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். பிகார் மாநிலத்தில் 96 மருத்துவர்களும், உத்தரப் பிரதேசத்தில் 41 மருத்துவர்கள், ஆந்திராவில் 22 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். அதேபோல், குஜராத்தில் 31 மருத்துவர்கள், தெலங்கானாவில் 20 மருத்துவர்கள், மேற்கு வங்கம், ஒடிசாவில் தலா 16 மருத்துவர்கள், மகாராஷ்டிராவில் 15 மருத்துவர்கள் கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலான மருத்துவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். முதல் அலையைவிட, கொரோனா இரண்டாவது அலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “மருந்துவாங்கச் சென்ற இளைஞரின் கன்னத்தில் அறைந்த ஆட்சியர்” : சத்தீஸ்கரில் நடந்த கொடூரம் !