India

"இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் கவலையளிக்கிறது; ஒரே வழி தடுப்பூசிதான்" : WHO தலைவர் டெட்ரோஸ் பேச்சு!

கொரோனா பெருந்தொற்றில் இந்தியா சிக்கித் திணறிவருகிறது. டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றி அதிதீவிரமாகப் பரவி வருகிறது.

இதனால், இம்மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமல் கொரோனா நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவது மக்களைக் கவலைகொள்ளச் செய்துள்ளது.

மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் தான் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு கவலையளிக்கிறது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அவர் பேசுகையில், இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. இறப்புகள் அதிகரித்துள்ளன. முதலாவது அலையை விட இரண்டாவது கொரோனா அலை மிகவும் ஆபத்தாக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

அதேபோல், நேபாளம், இலங்கை, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தடுப்பூசிகள் வழங்குதல் மூலம் உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுவதுதான் தொற்றிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “அந்த தைரியமான பெண்ணை இழந்துவிட்டோம்” : கொரோனா சிகிச்சையின் போது பாடல் கேட்டு வைரலான இளம்பெண் உயிரிழப்பு!