India

“மோடி அரசு தனது கடமைகளையும், பொறுப்புகளை தட்டிக்கழித்து வருகிறது” - சோனியா காந்தி குற்றச்சாட்டு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு போதிய கவனம் செலுத்தாததால் தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்திற்கு மேல் பதிவாகி வருகிறது.

கொரோனா தொற்று தொடர்ந்து அதிரித்து கொண்டே வருவதால் நாடுமுழுவதும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சோனியா காந்தி தலைமையில் காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் பேசிய சோனியா காந்தி,கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. மேலும் அறிவியல்பூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசு வேண்டுமென்றே நிராகரித்ததால் அதன் கொடுமையான தாக்கத்தை தற்போது நாடு அனுபவித்து வருகிறது.

நாட்டின் பொது சுகாதார அமைப்புகள் அனைத்தும் சீர்குலைந்துள்ளது. மோடி அரசு தனது கடமைகளையும், பொறுப்புகளை தட்டிக்கழித்து வருகிறது. 18 முதல் 44 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி செலவுகளை மாநிலங்களின் மீது மத்திய அரசு திணிக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடத்திவருவது வெட்கக்கேடானது. கொரோனா தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: இருப்பதை தாரை வார்த்துவிட்டு, வெளியில் இருந்து பெற்றதற்கு மார் தட்டிக்கொள்ளும் மோடி அரசு - ராகுல் சாடல்!