India
“தேர்தல் கமிஷன் இல்லையென்றால் பாஜகவால் 30 இடங்களில் கூட வென்றிருக்க முடியாது” - சட்டசபையிலேயே மம்தா சாடல்
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், அங்குச் சட்டசபை சபாநாயகராக திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிமா பாண்டியோபாத்யாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது சட்டசபையிலேயே மம்தா, பா.ஜ.க.வை மிகக் கடுமையாகச் சாடினார். சட்டசபையில் பேசிய மம்தா, மாநிலத்தில் வகுப்புவாத வன்முறையை தூண்ட முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தலில்வெற்றி தோல்வியடைந்த பா.ஜ.க. போலி செய்திகள் மூலம் வன்முறையைத் தூண்ட முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு நேரடியாகத் தேர்தல் ஆணையம் உதவியதாகப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும் தேர்தல் கமிஷனின் உதவி இல்லாமல் இருந்திருந்தால் பா.ஜ.க.வால் 30 தொகுதிகளைக் கூட தாண்டியிருக்க முடியாது என்றும் தேர்தல் கமிஷின் கண்காணிப்பில் இருக்கும் பல இடங்களில் மோசடி நடைபெற்றதாகவும் விமர்சித்தார். மேலும், தேர்தல் ஆணையத்தில் தற்போது உடனடியாக சீர்திருத்தங்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "மேற்கு வங்கத்தில் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற முயற்சியில், அவர்கள் இந்தியாவையே ஒட்டுமொத்தமாக அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளனர். கடந்த ஆறு மாதங்களாகவே மத்திய அரசு எந்தவொரு வேலையையும் செய்யவில்லை. வங்கத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என இங்கு முகாமிட்டிருந்தனர். இருப்பினும், அவர்களால் இங்கு ஆட்சியைப்பிடிக்க முடியவில்லை".
இவ்வாறு மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம் சாட்டினார்.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!