இந்தியா

“கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்திய வளங்களை பயன்படுத்தாத மோடி அரசு” - சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு

கொரோனா பாதிப்பு நிலைமையை சமாளிப்பது தொடர்பாக ஆலோசித்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்ட வேண்டும் என சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்திய வளங்களை பயன்படுத்தாத மோடி அரசு” - சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காணொலி வழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:- கொரோனா பாதிப்பு கையாளப்படும் நிலையைப் பொருத்தவரை அரசு நடைமுறை தோல்வியுறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது

மாறாக, மோடி அரசுதான் இந்தியாவின் பல்வேறு விதமான பலம் மற்றும் வளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தத் தெரியாமல் இருந்து வருகிறது. மக்களின் மீது இரக்கமில்லாத அரசியல் தலைமையை இந்தியா பெற்றிருக்கிறது. அந்த வகையில், மோடி அரசு தோற்றுப் போயிருக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான போரைப் பொருத்தவரை கட்சி வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் ஒரே தேசமாக ஒன்றிணைந்து போராட வேண்டும். இந்த உறுதிப்பாட்டின் முதல்படியாக, கரோனா நிலைமையை திறம்பட சமாளிப்பது தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை மோடிஅரசு உடனடியாகக் கூட்டும் என நம்புகிறேன்.

அதோடு, கொரோனாவுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தவும், அத்தகைய நடவடிக்கைகளை சிறந்த முறையில் இருப்பதற்கு பொறுப்பேற்கச் செய்யும் வகையிலும் நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் கூட்டத்தையும் கூட்ட வேண்டும். கொரோனா நிலைமைய சமாளிக்க ஆக்சிஜன், மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர் விநியோகத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற நிபுணர்களின் கருத்தை மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.

தடுப்பூசி திட்டத்திலும் சமத்துவமின்மையை கடைப்பிடித்து வருகிறது. லட்சக்கணக்கான தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் ஏழைகள் தடுப்பூசி திட்டத்தில் தவிர்க்கப்படுகின்றனர். மக்களுக்கான கடமைகளையும் தார்மிக பொறுப்புகளையும் மத்திய அரசு கைவிட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, அபிஷேக் சிங்வி, கௌரவ் கோகோய் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, கொரோனா பாதிப்பு நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி, பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கையை வகுக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் விருப்பம் என்றனர்.

banner

Related Stories

Related Stories