India

ஏப்ரல் மாதத்தில் 75 லட்சம் பேர் வேலையிழப்பு... இதுதான் மோடி அரசு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் லட்சணமா?

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதலே வேலைவாய்ப்பின்மை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வறுமையால் தவித்து வருகின்றனர். இதற்கிடையே, கொரோனா தொற்றும் சேர்ந்து வேலையின்மையை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. வருவாய் இழப்பால் பெரும்பாலானோர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர்.

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக இந்தியா கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. கடந்த சில வாரங்களாக 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை தினசரி 3 ஆயிரத்தை கடந்து வருகிறது.

இதன் காரணமாக பல மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கு நிலவுகிறது. ஏப்ரல் மாதத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் சுமார் 75 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய இயக்குனர் மகேஷ் கூறும்போது, “ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தில் 75 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் வேலையிழப்பு விகிதம் 7.97 -ஐ எட்டியுள்ளது.

மார்ச் மாதத்தில் நாட்டின் வேலையின்மை விகிதம் 6.50 ஆக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் 7.97 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் வேலையிழப்பு அதிகரிப்பதைப் பார்க்கிறேன்.

வேலை இழப்பு ஒருபக்கம் அதிகரித்து வரும் சூழலில் தொழிலாளர் பங்களிப்பு வீதமும் குறைந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படாவிட்டால் மே மாதத்தில் இதை விட அதிகமாக வேலையின்மை விகிதம் உயரும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "கொரோனா பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்படுவோம்” - பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!