India

ஒரு மணிநேரம் ஆக்சிஜன் தாமதமானதால் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு... டெல்லி மருத்துமனையில் ஏற்பட்ட சோகம்!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் இந்தியா சிக்கிக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதிலும் வட மாநிலங்களிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகளின் உறவினர்கள் ஆக்சிஜனை வாங்குவதற்காக வீதி வீதியாக அலைந்துவருகின்றனர்.

மேலும் கடந்த வாரம் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளேயே மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 8 கொரோனா நோயாளிகள் பேர் உயிரிழந்துள்ளதாக அம்மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்த 8 பேரில் அந்த மருத்துவமனையிலேயே மருத்துவராக பணியாற்றி வந்த மூத்த மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனையிலிருந்த ஆக்சிஜன் கிட்டத்தட்ட 12.15 மணிக்கு முழுமையாகத் தீர்ந்துவிட்டது. அதையடுத்து மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வந்துசேர கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஆனதால் இந்த உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதுகுறித்து டெல்லி அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், டெல்லி மாநிலத்திற்கு உடனடியாக 480 டன் ஆக்சிஜனை விநியோகம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன் வழங்கவில்லை என்றால் நீதிமன்ற நடவடிக்கை பாயும் எனவும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also Read: “சுதந்திர நாட்டில் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்காதது வெட்கக்கேடு” - யோகி அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் குட்டு!