India

"அம்மாவை காப்பாத்தணும்; ஆக்சிஜன் தாங்க” - காலில் விழுந்து கதறிய பெண்... கடைசியில் நேர்ந்த சோகம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வெகுதீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது.

தலைநகர் டெல்லி தொடங்கி பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக நோயாளிகள் உயிரைப் பிடித்துக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அலைந்து வருகின்றனர்.

நாட்டின் பல முக்கிய மருத்துவமனைகள் கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவ ஆக்சிஜனுக்கு கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டன. அரசிடம் கோரிக்கை விடுத்தும் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் கொத்துக்கொத்தாக உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

சில நாட்களுக்கு முன் ஸ்ருதி சஹா எனும் பெண் டெல்லி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் ஆலைக்கு வெளியே காத்திருந்தார். அப்போது அங்கிருந்த காவலர்களின் காலைப் பிடித்து, “விரைவாக ஆக்சிஜன் கிடைத்தால்தான் எனது அம்மாவை காப்பாற்ற முடியும்” எனக் கெஞ்சியுள்ளார்.

ஆனால், அவருக்கு ஆக்சிஜன் கிடைக்கும் முன்பே, அவரது தாயின் மரணச் செய்தி கிடைத்துள்ளது. அவரது குடும்பத்தினர் தொலைபேசி வாயிலாக தாய் மரணமடைந்த தகவலைச் சொன்னதும், அந்த இடத்திலேயே கதறித் துடித்தார் ஸ்ருதி சஹா.

ஆக்சிஜன் கிடைக்காமல் தாய் உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்த ஸ்ருதி சஹா, “டெல்லியில் எங்கும் ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை. அதிகாலை துவங்கி ஆக்சிஜன் தேடி அலைந்து இங்கு வந்தோம். எனது அம்மாவின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று நான் அவர்களிடம் கெஞ்சியும், ஆக்சிஜன் கிடைக்கவில்லை” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தனது தாய்க்கு ஆக்சிஜன் வேண்டி ஸ்ருதி சஹா கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதேநேரம், ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க முயலாத பா.ஜ.க அரசுக்கு எதிராக கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

Also Read: “ஆக்சிஜன் சென்று சேராததற்கு நாங்களா பொறுப்பு? ஒதுக்கீடுதான் செய்ய முடியும்” - மோடி அரசு அலட்சிய பதில்!