India

“நான் வாழ்ந்துவிட்டேன்; என் படுக்கையை இளைஞருக்கு கொடுங்கள்”- நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முதியவர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா அதிக பாதிப்பையும், அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவின் பல மாநிலங்களில் ஆக்சிஜன், தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றி நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர். ஆனால், பா.ஜ.கவினரோ, தடுப்பு மருந்துகளுக்கும், மருத்துவமனை படுக்கைகளுக்கும் தட்டுப்பாடே இல்லை என தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், முதியவர் ஒருவர் இளைஞருக்காக தனது படுக்கையை விட்டுக்கொடுத்துள்ளார். நாராயண்ராவ் தபாத்கர் என்ற 85 வயது முதியவர் நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது ஆக்சிஜன் அளவு குறைந்துகொண்டே வந்துள்ளது.

அப்போது மருத்துவமனையில் பெண் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது 40 வயது கணவருக்காக மருத்துவமனையில் படுக்கை கேட்டு மன்றாடியதைப் பார்த்த நாராயண்ராவ், மருத்துவர்களிடம், “நான் என் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன். இளைஞர் ஒருவரின் உயிர் முக்கியம், அவரது குழந்தைகளும் சிறுவயதினர், என் படுக்கையை அவருக்குக் கொடுங்கள்” எனக் கூறியுள்ளார்.

அதற்கு மருத்துவர்கள், “உங்கள் உடல்நிலையே சரியாக இல்லை. உங்களுக்கு சிகிச்சை அவசியம்” என்று கூறியுள்ளனர். ஆனால் நாராயண்ராவ் தன் மகளை அழைத்து இதுகுறித்துக் கூறி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றுள்ளார்.

டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்ற 3 நாட்களில் நாராயண்ராவ் உயிரிழந்துள்ளார். இளைஞரின் உயிரைக் காப்பதற்காக தனது படுக்கையை விட்டுக்கொடுத்த நாராயண்ராவின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: "நோயாளிகளின் குடும்பத்தினர் பொய் சொல்கிறார்களா?” - உ.பி முதல்வரின் பேச்சால் ப.சிதம்பரம் கொந்தளிப்பு!