India

“பாஜக சொல்வதுபோல தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை; நோயாளிகளுக்குத்தான் பற்றாக்குறை” - ப.சிதம்பரம் கிண்டல்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து தினந்தோறும் 2 லட்சத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. கொரோனாவை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே பல மாநிலங்களில் தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், உடனடியாக குறிப்பிட்ட தடுப்பூசிகளை வழங்குமாறும் அந்தந்த மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், மத்திய பா.ஜ.க அரசு தடுப்பூசி பற்றாக்குறை இல்லை எனக் கூறி வருகிறது. பா.ஜ.க அரசை விமர்சிக்கும் விதமாக “தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை, நோயாளிகள்தான் பற்றாக்குறையாக உள்ளனர்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான ப.சிதம்பரம், “மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இல்லை என அறிவிப்பு பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. ஆனால், தடுப்பூசிகள் பற்றாக்குறை இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மறுக்கிறார்.

மத்திய அமைச்சரை நம்புங்கள். தடுப்பூசிகள், ஆக்ஸிஜன், படுக்கைகள், ரெம்டெசிவீர் மருந்து, மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்திற்கும் பஞ்சமில்லை. நோயாளிகள்தான் பற்றாக்குறையாக உள்ளனர்.

மேற்கு வங்கத்தைக் கைப்பற்றி பா.ஜ.க பேரரசுடன் இணைக்கும் அவசர யுத்தத்திற்கு மத்தியில் கொரோனாவிற்கு சிறிது நேரம் ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Also Read: கொரோனா பரவலிலும் மே.வ. தேர்தலில் படு பிசியான மோடி; உத்தவ் தாக்ரே கடும் குற்றச்சாட்டு!