India

கொரோனா பரவலிலும் மே.வ. தேர்தலில் படு பிசியான மோடி; உத்தவ் தாக்ரே கடும் குற்றச்சாட்டு!

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 38 நாட்களாக தினசரி பாதிப்பு இதுவரை கண்டிராத அளவுக்கு பதிவாகி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளையில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் இடப்பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என பல்வேறு மருத்துவ உபகரணங்கள் இல்லாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

அவ்வகையில் மகராஷ்டிர மாநிலத்திலும் அந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாட்டில் மராட்டியம் சிக்கியுள்ளது என முதலமைச்சர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.

ஆகவே இது தொடர்பாக பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முயற்ச்சித்திருக்கிறார் உத்தவ் தாக்ரே. ஆனால் பிரதமர் மோடியோ மேற்கு வங்க மாநில தேர்தல் பிரசாரத்தில் படு பிசியாக இருப்பதால் அவரிடம் மகாராஷ்டிராவின் நிலை குறித்து எடுத்துரைக்க முடியவில்லை என உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் நலனை விட கட்சியின் பலத்தை உயர்த்துவதிலேயே பிரதமர் மோடியின் கவனம் முழுவதும் உள்ளது என அரசியல் நோக்கர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Also Read: "மணி அடிப்பதும், கடவுள் புராணம் பாடுவதும்தான் மோடியின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கை” - ராகுல் காந்தி விளாசல்!