India
பரவும் கொரோனா 2வது அலை : மீண்டும் ஊர் திரும்பும் வட இந்திய தொழிலாளர்கள்.. சாகவிடப் போகிறீர்களா Mr.மோடி ?
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், அனைத்து போக்குவரத்தும் முடங்கியதால் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்ததுடன் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்குச் சேர்ப்பதில் மோடி அரசு தோல்வி அடைந்தது. இதன்விளைவாக 100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாலைவிபத்துகளில் சிக்கியும், ரயில் அடிபட்டு, உணவின்றியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து ஊரடங்கு படிபடியாக தளர்த்தப்பட்டு நாடு இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்த கொரோனா பரவலால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.
குறிப்பாக, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக, மகாராஷ்டிரா முழுவதும் திங்கள் முதல் வெள்ளி வரையில் இரவு நேரத்திலும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பகல், இரவு என முழு நேரமும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநில எல்லை மூடப்படும் என்ற அச்சத்தால், நாசிக் நகரில் பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பிஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். உணவகங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த பலர் தங்கள் குடும்பத்தினருடன் ரயில் மூலம் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இன்னும் பலர் சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பெருந்தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் இந்த சூழலில் சென்ற ஆண்டு இடம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கொடூரமான சூழல் மீண்டும் இந்தியாவில் அனுமதிக்க கூடாது என சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சிபிஐ(எம்) கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரதமர் அவர்களே! இடம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கொடூர சூழல் மீண்டும் உருவாகக் கூடாது.
பெருந்தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் இந்த சூழலில் சென்ற ஆண்டு இடம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கொடூரமான சூழல் மீண்டும் இந்தியாவில் அனுமதிக்க கூடாது. அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களும் மரணங்களும் மீண்டும் நிகழக்கூடாது.
பிரதமர் அவர்களே!
இப்பொழுதாவது ஏழை மக்களுக்கு நேரடி நிதி உதவி மாதத்துக்கு ரூ7500/- மற்றும் இலவச உணவு தானியங்களை கொடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!