India
“கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசியை செலுத்திய சுகாதார ஊழியர்கள்” : உ.பியில் நடந்த அவலம்!
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளது.
இந்நிலையில் தற்போதுவரை 9 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக அம்மாநில அரசுகள் கூறி உள்ளன.
இதுகுறித்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநில அரசுகள் கூறுகையில், தடுப்பூசி மருந்து வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவிலான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளுக்கு மருந்துகள் அனுப்பி வைப்பதை நிறுத்தி விட்டு நமது மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
இந்நிலையில், முதல் டோஸ் தடுப்பூசி போட முடியாமல் மக்கள் தவிப்பதோடு, முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் 2 வது டோஸ் தங்களால் சரியான நாளில் போட முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஆனால், தடுப்பூசி கையிருப்பு குறித்து மத்திய அரசோ முரண்பட்ட தகவலை அளித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடச் சென்ற 3 மூதாட்டிகளுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த சரோஜ், அங்கரளி மற்றும் சத்யவதி என்ற மூதாட்டிகள் மூன்று பேர் மருத்துவமனைக்குச் சென்று கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு மூதாட்டிகள் மூன்று பேருக்கும் வெறிநாய் கடிக்கு போடப்படும் ரேபிஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் வீடு திரும்பிய மூதாட்டி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மூதாட்டியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பான தகவலை மூதாட்டி மருத்துவரிடம் காண்பித்துள்ளார்.
அப்போது அதனை சரிபார்த்த மருத்துவர், மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கு போடப்படும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிர்ச்சி தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, நேற்றைய தினம் அந்த அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மற்றும் வெறிநாய் கடிக்கு போடப்படும் ரேபிஸ் தடுப்பூசி சிறப்பு முகாமும் நேற்று நடைபெற்றுள்ளது.
இந்த இரு தடுப்பூசி முகாம்களும் நடைபெற்ற நிலையில், மருத்துவமனைக்கு வந்த மூதாட்டிகள் மூன்று பேரும் தவறுதலாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பகுதிக்கு சென்று வரிசையில் நின்றுள்ளனர். அவர்களிடம் எந்த வித கேள்வியையும் கேட்காமல் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வந்தவர்கள் என மூதாட்டிகள் மூன்று பேருக்கும் ரேபிஸ் தடுப்பூசியை மருத்துவமனை ஊழியர்கள் செலுத்தியதாக கூறப்பட்டுகிறது.
இதனையடுத்து தவறுதலாக தடுப்பூசி செலுத்திய அரசு மருத்துவமனை ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!