India

ஆதார், பான் கார்டு, KYC தகவல்களை விற்பனை செய்ததா ‘Mobikwik’ நிறுவனம்? : கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

இந்தியாவில் பரவலாக ‘மொபிக்விக்’ (Mobikwik) என்ற பேமண்ட் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் பயனர்களின் பெயர், பான் எண், ஆதார் எண் மற்றும் கே.ஒய்.சி விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் கசிந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து ‘மொபிக்விக்’ பயனர்கள் பலரும் அந்த செயலியில் இருந்து தங்கள் கணக்குகளை நீக்கி வெளியேறத் தொடங்கினர். இதுதொடர்பாக செயலி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக பிரெஞ்சு எத்திகல் ஹேக்கர் ராபர்ட் பேப்டிஸ் என்பவர் இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதேபோல், இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவரும் இதுதொடர்பாக கடந்த மாதமே பதிவிட்டுள்ளார்.

அதில், இந்தச் சம்பவம் மூலம் 3.5 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்கள், சுமார் 8.2 TB அளவிலான தகவல் கசிந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த தகவல் டார்க் வெப்பில் விற்பனைக்காக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த தகவல் கசிவை ‘மொபிக்விக்’ நிறுவனம் முழுமையாக மறுத்துள்ளது. இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் வெளியிட்ட புகைப்படங்கள் உண்மையானது அல்ல என்றும் தங்களின் வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்பாக உள்ளதாகவும் ‘மொபிக்விக்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் அதேவேளையில், வாடிக்கையாளர்கள் பலருமே தங்களின் தகவலை இணையத்தில் வெளியானது உண்மைதான் என்றும், தாங்களே அந்த தகவலைப் பார்க்க முடிகிறது என்றும் தெரிவித்து வருகின்றனர். மேலும் ‘மொபிக்விக்’ நிறுவனம் உண்மையை மூடி மறைத்து வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாகவும் ட்விட்டரில் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Also Read: “தேர்தல் காலங்களில் மொழிப்பற்று வேசம் போடும் பா.ஜ.க”: பிரதமர் மோடியின் திடீர் தமிழ் பாசம் உண்மையானதுதானா?