India

இந்தியாவில் நாள்தோறும் உச்சம் தொடும் கொரோனா பரவல் : நேற்று ஒரே நாளில் 40,953 பேர் பாதிப்பு ! #COVID19

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகம் இருந்தது. இதையடுத்து, கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு தற்போது மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வந்ததையடுத்து, ஊரடங்குகள் தளர்த்தப்பட்டது. இதனால் மக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதை மறந்து வழக்கம்போல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு 80 சதவீதத்திற்கு அதிகமாகப் பதிவாகி வருகிறது. இதனால் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள சில நகரங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று 39 ஆயிரத்து 726 என்று இருந்த கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை இன்று 40 ஆயிரத்து 953 என தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்று 188 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மகாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் 25,681 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 70 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் மத்தியப்பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களிலும் கொரோனா தினசரி தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு , கடந்த 6 நாட்களில் மட்டும் சராசரியாக 10 ஆயிரத்திற்கு மேல் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "பெட்ரோல் விலையோடு, வாகனங்களின் புதுப்பித்தல் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்துவோம்” : மோடி அரசு அராஜகம்!