India

அரசால் நிகழ்ந்த பட்டினிச்சாவு... 3 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதற்கு ஆதார் அட்டை காரணமா?

'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என பா.ஜ.க அரசு கூவிவரும் நிலையில், 3 கோடி ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பட்டினிச்சாவுகள் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் கோயிலி தேவி. இவரது ரேஷன் அட்டையுடன், ஆதார் இணைக்கப்படாததால், உணவுப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், குடும்பம் பட்டினியால் வாடிய நிலையில், கடந்த 2017ம் ஆண்டு கோயிலி தேவியின் 11 வயது மகள் சந்தோஷி குமாரி பசியால் இறந்தார்.

இதையடுத்து கோயிலி தேவி சார்பில், மூத்த வழக்கறிஞர் கோலின் கன்சால்வ்ஸ், உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான வழக்கறிஞர் கோலின் கன்சால்வ்ஸ், போலி ரேஷன் கார்டுகள் எனக் காரணம் காட்டி அவற்றை ரத்து செய்தது அரசு. ஆனால், ஆதார் இணைக்காத காரணத்தாலேயே, மூன்று கோடி ரேஷன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்தது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரினார்.

மேலும், பட்டினிச்சாவு மரணங்களை அரசுகள் மூடிமறைத்து, வயிற்றுப்போக்கு, மலேரியா எனக் காரணம் கூறுகின்றன. ஆனால் உண்மையான காரணம் வறுமை மற்றும் ரேஷன் கார்டு ரத்து காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்காததுமே என அவர் தெரிவித்தார்.

3 கோடி ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுவது மிகவும் தீவிரமான விஷயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மூன்று கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதற்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாததே காரணம் என்ற தகவல் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மீண்டும் ஊரடங்கு?.. முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அமைச்சர், அதிகாரிகள்?: மக்களை குழப்பும் அதிமுக அரசு!