India
பெட்ரோல் டீசல் விலை பற்றிக் கேட்டால் முகத்தை மூடிக்கொள்ளும் மோடி : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா ஆவேசம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் மற்றும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவான நடவடிக்கையை ஆளும் மோடி அரசு எடுக்க மறுப்பதாகக் கூறி, எதிர்க்கட்சி எம்.எபி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை முடங்கியது. அதன்பின்னர் முதல் அமர்வுக்கு பின்னர் மாநிலங்களவை பிப்ரவரி மாதம் 12-ந் தேதியும், மக்களவை 13-ந் தேதியும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில் பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடியது. இந்நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து அவையை ஒத்திவைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் அவையில் கூச்சல் நிலவியது.
இதனிடையே மாநிலங்களவையில், பெட்ரோல் வரி மூலம் அரசு 21 லட்சம் கோடி வசூலித்திருப்பதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார். மேலும், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால், தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவை ஒத்திவைப்பு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி திருச்சி சிவா, “பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பிரதமர் நேரடி பதில் தர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் குரல் எழுப்பினோம்.
அதனால், விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டு அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாளை மீண்டும் அவை கூடும்போது இந்த பிரச்னை தொடர்பாக தொடர்ந்து குரல் எழுப்புவோம். இந்தியாவை விட அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை மிகக் குறைவாக உள்ளது.
மன்மோகன் சிங் பதவியில் இருந்து இறங்கும்போது கச்சா எண்ணெய் விலை 101 டாலர், ஆனால் டீசல், பெட்ரோல் விலை இன்று உள்ளதைவிட 30 ரூபாய் குறைவாக இருந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை சரிபாதியாக குறைந்தபோதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஒருமுறை விலை உயர்த்தியதற்காக பெரும் போராட்டம் நடத்திய பா.ஜ.க, தற்போது தொடர்ச்சியாக எரிபொருள் எண்ணெய் விலையை உயர்த்தி வருகிறது. இது மக்களுக்கு இரட்டிப்பு துன்பத்தை தருகிறது. விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
பொங்கல் திருநாள்; 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் தெரியுமா?
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
”உங்க கனவை சொல்லுங்கள்” தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய தகவல்!