India
நாடு முழுவதும் CAA பற்றி பேசும் பாஜகவுக்கு அசாமில் பேச தைரியம் இல்லை : மோடி-ஷாவை சாடிய பிரியங்கா காந்தி!
அசாம் சட்டமன்றத்திற்கு வரும் மார்ச் 27ம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் பல்வேறு அரசியல் தலைவர்களும் அசாம் மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வென்ற பா.ஜ.க. தற்போது அசாம் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ளது.
கடந்த முறை பா.ஜ.கவிடம் இழந்த அசாம் மாநிலத்தில் மீண்டும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்குச் சென்றுள்ளார்.
அசாம் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, "உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நாட்டின் ஒற்றுமை மற்றும் அசாமின் ஒற்றுமை ஆகியவற்றில் பிரச்சினை உள்ளது. அவர் நாடு முழுவதும் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. சட்டங்கள் பற்றிப் பேசியுள்ளார். ஆனால் அசாம் மாநிலத்தில் மட்டும் இது குறித்துப் பேசாமல் இருக்கிறார்.
தேர்தலுக்கு முன்பு, அசாமில் என்.ஆர்.சி. செயல்படுத்தப்படாது என்று பா.ஜ.க. கூறியிருந்தது. அந்த வாக்குறுதி இப்போது என்ன ஆனது?" என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு சி.ஏ.ஏ. சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
அதிலும் குறிப்பாக அசாம் மாநிலத்தில் இந்தப் போராட்டம் மிகப் பெரியளவில் நடைபெற்றது. இந்தச் சட்டம் தங்களின் அடையாளத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். அசாம் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து பா.ஜ.கவை தாக்கிப் பேசிய பிரியங்கா காந்தி, "நிலத்தையும் அடையாளத்தையும் காப்பாற்ற அசாம் மக்கள் போராடுகிறீர்கள். இந்த மாநிலத்தின் ‘ஜெய் அசாம்’ என்ற முழக்கத்தை பா.ஜ.க. தனது கார்ப்ரேட் நண்பர்களுடன் இணைந்து அடக்க முயல்கிறது. இங்கு இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
ஆனால் பா.ஜ.க. அரசு விமான நிலையங்களையும், எண்ணெய் வயல்களையும் தொழிலதிபர்களுக்கு விற்கிறது. அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் நிச்சயம் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படாது" என்றார்.
Also Read
-
தமிழ்நாட்டில் விடுமுறை அறிவிப்பு… தேர்தல் நாளன்று பொது விடுமுறை.. வெளியான அரசாணை! - முழு விவரம் உள்ளே!
-
பிரம்மபுத்ராவில் சீனாவின் அணை : ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்? : அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த கி.வீரமணி!
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!