India

மகளின் தலையை துண்டித்து கையோடு எடுத்துச் சென்ற தந்தை : உத்தர பிரதேசத்தில் கொடூர ஆணவக்கொலை!

உத்தர பிரதேச மாநிலம், ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் குமார். இவரது மகள் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சர்வேஷ் குமார் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருந்தும் மகள், இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இதனால், மகள் மீது ஆத்திரத்தில் இருந்துவந்த சர்வேஷ்குமார், நேற்று மனைவி வேலைக்குச் சென்றபோது, வீட்டில் இருந்த மகளை தனி அறைக்குள் அழைத்துச் சென்று, கத்தியால் அவரது கழுத்தில் வெட்டி, தலையை கொடூரமாகத் துண்டித்துள்ளார்.

பின்னர், மகளின் தலையை கையில் எடுத்துக்கொண்டு, காவல் நிலையம் நோக்கி நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த போலிஸார் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவரிடம் போலிஸார் நடத்திய விசாரணையில், காதலித்ததால் மகளின் தலையை துண்டித்தாகக் கூறியுள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் மகளின் தலையை துண்டித்து தெருவில் எடுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில், யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்தே, பாலியல் குற்றங்களும், கொலைக் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தேசிய அளவில் அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலமாகவும் உத்தர பிரதேசம் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், ஆணவக் கொலைகள் நிகழ்ந்து வருவது உ.பி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Also Read: கிராம உதவியாளர் பணிக்கு ரூ.6.50 லட்சம் லஞ்சம் பெற்ற அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்: அதிர்ச்சி கிளப்பும் ஆடியோ!