India

Whats Appக்கு பதிலாக Sandes App : அரசு அதிகாரிகள் தகவல்களை பரிமாறிக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தல்?

ஃபேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்-அப் செயலி உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது, சமீபத்தில் அதன் 'பிரைவசி பாலிசி' எனப்படும் புதிய தனியுரிமை கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது. இந்த புதிய கொள்கையை பயனாளர்கள் ஏற்க வேண்டும், இல்லையெனில் வாட்ஸ்-அப் பயன்படுத்த முடியாது என தெரிவித்தது. இது உலகம்m முழுவதும் அந்த செயலியின் பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அறிவிப்பு பயனர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியதை அடுத்து, புதிய தனியுரிமை கொள்கையை அமல்படுத்துவதைத் தள்ளி வைப்பதாக வாட்ஸ்-அப் நிறுவனம் அறிவித்தது.

இதனிடையே இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட பலர் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் ஆதரவு தெரிவித்து பதிவிட்டிருந்தனர். இதனால் ஆவேசமடைந்த மத்திய அரசு ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் கணக்குகளை முடக்க வேண்டும் என ட்விட்டர், ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் இந்நிறுவனங்கள் இதை ஏற்க மறுத்துவிட்டனர்.

இதனால், மத்திய அரசு ட்விட்டருக்கு பதிலாக KOO Appஐ அறிமுகம் செய்தது. இதனை பா.ஜ.கவை சேர்ந்த பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், வாட்ஸ்-அப்க்கு மாற்றாக Sandes என்ற புதிய செயலி ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதனை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின், ஒரு பகுதியாக இருக்கும் தேசிய தகவல் மையம் NIC உருவாக்கியுள்ளது.

இந்த செயலி அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வரவில்லை என்றாலும், APK File பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் GIMS போர்ட்டலில் உள்ள இந்த ஏ.பி.கே ஃபைலை, ஆன்டிராய்டு 5.0 மற்றும் அதற்கு மேலான வெர்சன் செல்போன் பயன்படுத்துபவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு இதுவரை தெளிவான விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை. அரசு அதிகாரிகள் தகவல்களை பரிமாறிக்கொள்ள அதிகளவு இந்த செயலியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.