India

“7 ஆண்டுகளுக்குப் பிறகும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முந்தைய அரசை குறை சொல்வதா?” - சோனியா கடிதம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆன பின்னரும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு முந்தைய அரசு மீது குறை கூறுவது வேதனையளிக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விலை உயர்வால், எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், மத்திய அரசு எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியாக ரூ.21 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது கொடுமையானது.

லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.33 வரியும்,1 லிட்டர் டீசலுக்கு ரூ.32 வரியும் வசூலிக்கப்படுகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

Also Read: "ஒவ்வொரு துறையையும் சீரழித்து ஒட்டுமொத்த நிர்வாக கட்டமைப்பையே உருக்குலைத்த பழனிச்சாமி" : மு.க.ஸ்டாலின்