India

“நீட் விலக்கு குறித்த தமிழக சட்டமன்ற தீர்மானத்தை நிராகரித்தது ஏன்?” - மத்திய அரசு பதில்!

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விதிவிலக்கு வழங்க வேண்டுமென்று இரண்டு மசோதாக்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, அதற்கான தீர்மானம் 2017ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த இரண்டு மசோதாக்களும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.

இந்த மசோதாக்கள் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட தகவலை தமிழக அரசு தெரிவிக்காமல் தமிழக மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றியது.

தமிழக அரசின் இரண்டு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவில்லை என்பதை மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதை ஏன் தமிழக அரசு மறைத்தது? முன்பே இதைத் தெரிவித்திருந்தால், மீண்டும் இந்தச் சட்டங்களை ஒரு தீர்மானத்தை இயற்றி அனுப்பியிருக்கலாம். திருப்பி அனுப்பப்பட்ட இந்தக் கடிதங்கள் தொடர்பாக 19 மாதங்களாக சட்டப்பேரவையில் ஏன் தெரிவிக்கவில்லை என தி.மு.க தலைவர் கடுமையாகச் சாடினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுகு தமிழக முதல்வரோ, சட்ட அமைச்சரோ சரியான பதிலளிக்கவில்லை. இதுவரை நீட் தேர்வு விவகாரத்தில் உண்மைகளை மறைத்து பொய்களையே பேசி வருகிறது அ.தி.மு.க அரசு.

இந்நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு நிறைவேற்றிய சட்டங்கள் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தின் விதிகளுக்கு எதிராக இருந்ததால் மத்திய நிராகரித்துவிட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு நிறைவேற்றிய சட்டங்களின் நிலை குறித்து தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத் துறை, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு அவசர சட்டங்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது.

ஆனால், அந்தச் சட்டங்கள் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தின் 10-டி விதிகளுக்கு எதிராக இருந்ததால் மத்திய உள்துறை அமைச்சகம் அதனை நிராகரித்துவிட்டது என பதிலளித்துள்ளது.

Also Read: “நீட் உள்ஒதுக்கீடு: மோடி அரசின் புதிய நிலைப்பாட்டால் ஆபத்து வராமல் காத்திடுக” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!